Main Menu

நலன்புரிக் கொடுப்பனவுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்

கொரோனா வைரஸ் நெருக்கடியினால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், நலன்புரிக் கொடுப்பனவுக்காக (Universal Credit) விண்ணப்பிக்க எடுக்கும் முயற்சி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது என பலரும் கூறுகின்றனர்.

கடந்த ஒன்பது நாட்களில் 500,000 க்கும் அதிகமானோர் நலன்புரிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்துள்ளதாக வேலை மற்றும் ஓய்வூதியத் துறை நேற்றுப் புதன்கிழமை (25.03.20)  தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய தேவைக்கு ஏற்ற  சேவையின் ஆற்றல்   மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பார்கள் என பயணாளிகள் தொடர்பான  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வேலை மற்றும் ஓய்வூதியத் துறையில்  (DWP) யாருடனும் பேசுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

முதல் முறையாக விண்ணப்பங்களை  முன்வைப்பவர்கள்  80 முதல் 100 முறை வரை சேவையை அழைப்பதால் எந்த பயனும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறு பலர்  முயற்சித்து வருகின்றனர்.

எனினும் அதனைப் பெற முடியவில்லை. நேற்று (25.03.20) ஒரு கட்டத்தில் 145,000 பேர் இணையதளத்தில் உள்நுழையக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Universal Credit கொடுப்பனவுக்கான முதல் விண்ணப்பத்தை வழமையாக மேற்கொள்பவர்கள் அனைவரும் தங்கள் உள்ளூர் வேலை மையத்தில்  நேரடியாக  கலந்துகொள்வார்கள். இருப்பினும், Covid -19 நெருக்கடி தொடங்கியதிலிருந்து, விண்ணப்பதாரர்கள் தொலைபேசி மூலம் விண்ணப்பம்  செய்ய 0800 எண்ணை அழைக்க வேண்டும், ஆனால் அது சாத்தியமற்றது என விண்ணப்பதாரர்கள் கூறுகின்றனர்.

பணம் செலுத்துபவர்கள் ஏற்கனவே ஐந்து வார கால காத்திருப்புகளை எதிர்கொண்டனர். விதிகள் மாற்றப்படாவிட்டால் இந்த  அமைப்பின் ஆற்றல் முழுமையாகப் பாதிக்கப்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை  £16,000 க்கும் அதிகமான சேமிப்பு உள்ளவர்கள் Universal Credit கொடுப்பனவைப் பெற உரிமை இல்லை என்ற பிரச்சினையை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொலைபேசி அழைப்பைக் கையாளுபவர்களின் பற்றாக்குறை குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் உதவிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிப்பவர்களை பாதிக்கிறது, ஊனமுற்றோர் அல்லது சுகாதார நிலை உள்ளவர்கள், தொலைபேசி அழைப்பையே  நம்பியிருக்கிறார்கள்.

நலன்புரிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்த 30 நாட்களுக்குள் அவர்களுக்கான உதவித் திட்டம் பூர்த்தி செய்யப்பட வேண்டும், மேலும் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்க, நேர்காணல் நடத்தப்பட வேண்டும். எனினும் தற்போதைய நிலையில்  அதனைப் பெறுவது சாத்தியமில்லை என அவர்கள் கருதுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்களுக்கு உதவுவதற்காக திணைக்களம் இதுவரை 1,500 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது என்றும், வார இறுதிக்குள் இதை 3,900 ஆக உயர்த்துவதே தமது நோக்கம்  எனவும் சமூக நலன்புரித் துறையின் உயர்மட்ட அரச ஊழியர் பீற்றர் ஸ்கோஃபீல்ட் (Peter Schofield)  தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு பெரும் சவாலுக்கு உட்பட்டுள்ளது. ஆனால்  விண்ணப்பங்கள் பத்து மடங்கு அதிகரிப்பதால் எங்கள் சேவைகளில் அழுத்தங்கள் இருப்பது தவிர்க்க முடியாதது.

ஏற்கெனவே இருக்கும் 1,000 பேருடன் புதிய  விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில்  பணிபுரிய 10,000 ஊழியர்களை இணைப்பது  உட்பட திறனை அதிகரிக்க நாங்கள் அவசர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் இந்த முயற்சிக்கு உதவ 1,500 ஊழியர்களை நியமிப்போம்.

விண்ணப்பக் கோரிக்கைகளை விரைவாகச் செயற்படுத்த நெருக்கடியான சூழ்நிலைகளில் மிகவும் கடினமாக உழைக்கும் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என வேலைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சர் தெரெஸ் கோஃபி (Thérèse Coffey) குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...