Main Menu

கொரோனா வைரஸ் பரிசோதிப்புக்காக மட்டக்களப்பை தெரிவு செய்தமைக்கு கண்டனத் தீர்மானம்!

COVID-19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களைப் பரிசோதிக்கும் நிலையங்களை மட்டக்களப்பில் ஏற்படுத்தியமை தொடர்பாக கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பரிகோதனைக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுள்ள நிலையில் நிந்தவூர் பிரதேச சபையில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபைக் கூட்டமும் 2020ஆம் ஆண்டின் பிரதேச சபையின் 24ஆவது சபை அமர்வும் இன்று (வியாழக்கிழமை) நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபைக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மத அனுஷ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் தெரிவிக்கையில், “30 வருடங்கள் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் அதிகமான மக்கள் வாழும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.

தற்போது உலகையே உலுக்கும் உயிர்க் கொல்லி தொற்றுநோயாக கொரோனா வைரஸ் காணப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளே இவ் வைரஸினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பொருளாதார நிலையிலும் மருத்துவ வசதியிலும் வாழ்க்கைத் தரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் மட்டக்களப்பு பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக மக்கள் சனத்தொகை அதிகமாகக் காணப்படும் புணானை போன்ற பிரதேசங்களில் மிகவும் அபாயகரமான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மக்களை தடுத்துவைத்து பரிசோதிப்பது என்பது மிகவும் அபாயகரமானதாகும்.

உலக சுகாதார நிறுவனமான WHO இந்த கொரோனா வைரஸை உலக கொள்ளை நோயாக அறிவித்திருக்கும் நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கானவர்களை எவ்வித நவீன வசதிகளையும் கொண்டிராத மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து அவர்களை 14 நாட்களுக்கு அங்கு தங்க வைத்து பரிசோதிப்பதற்கு மேலதிக மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதுமான அரசாங்கத்தின் இந்த திட்டமானது மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு கிழக்கு மாகாணத்தையும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கி தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.

எனவே இச்செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் உடனடியாக இது தொடர்பாக மீள்பரிசீலனை செய்து, இம்மாவட்ட, மாகாண மக்களின் உள அச்சத்தை நீக்கி பாரிய கொள்ளை நோயான COVID-19 பாதிப்பிலிருந்து இம்மக்கள் பாதுகாப்பாக வாழ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது நிந்தவூர் பிரதேச சபை சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்” என கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பகிரவும்...