இரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் பொலிஸாரால் கைது
இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணைக் குத்திக்கொன்ற நபரை இன்று அதிகாலை நோர்தம்ப்ரன்ஷையர் பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை மாலை ரஷ்டனிலுள்ள (Rushden) செயின்ற் ஜோர்ஜ் வே (St George’s Way) அருகே குடியிருப்புப் பகுதியில் கார் மற்றும் வான் மோதியதில் தொடங்கிய இரண்டு நபர்களிடையிலான சண்டையை நிறுத்த முயன்றபோது 25 வயது இளம் தாய் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் லெவி டேவிஸ் (Levi Davis) என்னும் 25 வயதான இளம் பெண் உயிரிழந்தார்.
கொலைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜேக் டீன் ஸ்வோட்ஸ் என்ற 27 வயதான நபர் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளதாக துப்பறியும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை கொலைச் சந்தேகநபரைக் கொல்லமுயன்ற சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதுடைய இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தக் கொலை தொடர்பாக 13 வயதுச் சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நோர்தம்ப்ரன்ஷையர் பொலிஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற இலக்கம் மூலமாக அல்லது குற்றத்தடுப்புப் பிரிவு 0800 555111 என்ற இலக்கம் மூலமாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.