Main Menu

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்

வெகு விரைவில் வெளியில் வந்து தமது குடும்பங்களோடு சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற  ஆதங்கத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிடம் வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (6) நேரடியாக சென்று பார்வையிட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று (7) புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போதே  அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் அவ்வாறு தெரிவித்தார்.இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,,,,அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழு நேரடியாக சென்று சந்திப்பது வழமை. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை சந்தித்தோம்.பல கைiதிகள் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சுமார் 11 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்ற நிலையை காணக்கூடியதாக உள்ளது. நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடிய போது ஐனாதிபதிக்கு ஓர் மகஜர் அனுப்பி எங்களை விடுதலை செய்வதற்கான ஒரு கோரிக்கையை எங்களிடம் முன் வைத்தார்கள்.-எங்களை ஏன் விடுதலை செய்ய முடியாது? என்கின்ற கேள்வியையும் அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.ஏன் எமது தமிழ் அரசியல் வாதிகள் , அரசு ஏன் எங்களை இவ்வாறு புறம் தள்ளி இருக்கின்றது? என்று சொல்லி   உடல் சோர்ந்த நிலையில் எங்களிடம் கேட்டார்கள்.அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.தொடர்ந்தும் எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று எங்களிடம் தொடர்ச்சியாக கோட்டார்கள்.நாங்கள் வெகு விரைவில் வெளியில் வந்து எமது குடும்பங்களோடு சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை எங்களிடத்தில் தெரிவித்தார்கள்.-அவர்கள் பல்வேறு குழப்பத்தில் இருக்கின்றார்கள்.அவர்கள் வாழ்வில் முதிர்ச்சி அடைந்து செல்வதோடு,வாழ்வில் அர்த்தம் இல்லை என்பதை உணர்கின்றார்கள். -வாடிய முகங்களைத்தான் நாங்கள் அவர்களிடத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர்களின் இருப்பைப் பற்றிய யோசனைகள் எழுந்துள்ளது.இப்படியான ஒரு சூழ்நிலையிலே அரசியல் கைதிகளைப்பற்றி நாம் யோசிக்கின்ற போது இன்றைய குற்றவியல் நிகழ்வுகளோடு ஒப்பிடுகின்ற போது உண்மையிலேயே இவர்கள் குற்றமற்றவர்களாகவே மதிக்கத் தோண்றுகின்றது.-சமூக சீர்கேடுகள் ,தற்போது நடக்கின்ற வண்முறைகள்,நிலை மாறு நீதியில் இருக்கின்ற நிலை குழைவுகள் ஆகியவற்றை எல்லாம் நாங்கள் சிந்திக்கின்ற போது இவர்களின் தடுப்பு அர்த்தம் அற்றதாகவே தோண்றுகின்றது.பல ஆண்டுகளாக அதாவது 11 வருடங்களுக்கு மேலாக அர்த்தமற்ற முறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தேடல் ஒரு புறம் தேடலாக இருக்க கண் முன்னே சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் வாடுகின்ற இந்த உறவுகளின் சோகம் ஒரு புறம் எங்களை வாட்டுகின்றது.நீதிக்கு புறம்பானது என்பதை நாங்கள் என்னுகின்றோம். அரசும், அரசியல் வாதிகளும் சமூக ஆர்வலர்களும் இதனை அலட்சியப் படுத்தாது தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாக இருக்கின்றது.-போராட்டம் என்கின்ற வார்த்தையை விட்டு விட்டு இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான எங்களுடைய கோரிக்கையாக உள்ளது. அலட்சியப்போக்கை அவர்கள் நினைத்து மிகவும் மன வேதனை அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் மட்டில் நீதி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற இவர்கள் பல வழிகளிலே நிரபராதிகளாக இருக்கின்றார்கள்.இவர்களின் இருப்பிற்கு அர்த்தமற்ற ஒரு நிலை ஏற்படுகின்றமையினால் மோசமான ஒரு நிலை இவர்களின் வாழ்வில் தோற்றிவிக்கின்றது. இவர்களுக்கு ஒரு விமோசனத்தை கொடுப்பதற்கு நாங்கள் எல்லோறும் ஒன்று பட வேண்டும்.குரல் கொடுக்க வேண்டும்.-சிறப்பாக இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றவர்களுக்கு நாம் ஒத்துழைத்து இன்னும் இவர்களின் விடுதலைக்கு அதிகமாக குரல் கொடுக்க வேண்டும்.-நேரடி குற்றங்கள்,கொலைகள் பல செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டு பல பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் இந்த அப்பாவி பிள்ளைகள் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக சிறையிலே வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.-இவர்களின் குடும்பம் பாதீக்கப்படுகின்றது.இவர்களின் சொந்த வாழ்வும் பாதீக்கப்படுகின்றது.காலம் கடந்து இவர்களை விடுதலை செய்வார்களாக இருந்தால் இவர்களின் வாழ்வில் எவ்வித அர்த்தமும் இருக்காது.பிள்ளைகள் அனாதைகளாக இருக்கின்றார்கள்.எனவே இவர்களை உடனடியாக விடுலை செய்ய அரசியல் வாதிகள்,அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்களின் வாழ்வை மேம்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.தற்போது வரை -அனுராதபுரம் சிறைச்சாலையில் 105     அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் சுமார் 11 வருடங்களாக 6 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 12 அரசியல் கைதிகள் மோசமாக சிறையில் இருக்கின்றனர்.இவர்கள் எல்லோறும் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவருக்கு மட்டும் மன்னாரில் வழங்கு உள்ளது.ஏனையோருக்கு வவுனியாவில் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.கால தாமதத்துடனே இவர்களின் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே இவர்களின் விடுதலையை துரிதப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.  குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னார் ஜம்மியத்துல் உலாமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி மற்றும் பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது . 

பகிரவும்...