Main Menu

41 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்துக – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த 12ம் தேதி 2 இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளனர்.
இதுபோல் மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழக மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துகிறேன். இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...