Main Menu

26 ரஃபேல்-எம் விமான கொள்வனவு; பிரான்சுடன் இந்தியா இன்று ஒப்பந்தம் கைச்சாத்து

26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் இன்று (28) முறையாக கையெழுத்திட உள்ளன.

இது 63,000 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஒப்பந்தம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்திய கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல்-எம் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தம் 22 ஒற்றை இருக்கை மற்றும் நான்கு இரட்டை இருக்கை ஜெட் விமானங்களையும், கடற்படை பராமரிப்பு, தளவாட ஆதரவு, பணியாளர் பயிற்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதற்கான விரிவான தொகுப்பையும் உள்ளடக்கியது.

இதற்கான முறையான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மாலையில் டெல்லியில் உள்ள நௌசேனா பவனில் (Nausena Bhawan) இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தலைமையில் நடைபெற உள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தான நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ரஃபேல்-எம் ஜெட் விமானங்களின் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடற்படை 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விமானங்களைப் பெறத் தொடங்கும் என்றும், முழு கொள்வனவும் 2031 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபேல்-எம் உலகளவில் மிகவும் திறமையான விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.

தற்போது இது பிரெஞ்சு கடற்படையால் பிரத்தியேகமாக இயக்கப்படுகிறது.

இந்தியாவின் கடற்படை விமானப் போக்குவரத்துத் திறன்களை வலுப்படுத்துவதில் இந்த மைல்கல் ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

மேலும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துகிறது.

பகிரவும்...
0Shares