Main Menu

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இரு அடுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவுபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பணிப்பாளர் அசோக்க தர்தவன்ச தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “வாக்களிப்பின் பின்னர் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்காக பொலிஸ் நடமாடும் சேவை மற்றும் வீதிச் சோதனைச் சாவடிகளும்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, விசேட பாதுகாப்பு சோதனை நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்கள் இருக்கும் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நிலையங்களின் ஊடாக குறித்த வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்கள் தொடர்பாகவும் தகவல்கள் சேகரிக்கப்படுவதோடு இந்த செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொலிஸாரும் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணும் நடவடிக்கை இதற்காக உள்ள 64 நிலையங்களிலும் நாளை காலை 7 மணிமுதல் நடைபெறுவுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இரு நிலையத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் உட்பட 52 பேர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களின் உட்புற பாதுகாப்புக்கு மாத்திரம் மூவாயிரத்து 328 பேர் பணியில் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிபுற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி உட்பட 735 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணும் நிலையம் ஒன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் மூவாயிரத்து 200 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெளிப்புற பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய மூவாயிரத்து 69 நடமாடும் சேவைகளும், 153 கலகம் அடக்கும் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஆயிரத்து 263 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 269 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் 24 மணித்தியாலயமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான அனைத்து ஆலோசனைகளும் தேர்தல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தேர்தல் செயற்பாடுகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82 ஆயிரத்து 91 உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெரிவு அத்தாட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் மாத்திரமே வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் வாக்குப் பெட்டிகளைத் தவிர வேறு எந்த ஆவணங்களையும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாது.

தெரிவத்தாட்சியாளரின் ஆலோசனைக்கமைய தேவை ஏற்படின், வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும் நிலையங்களுக்குள் செல்லும் நபர்களை பரிசோதனை செயற்வதற்கும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போதும் அதற்குப் பின்னரும் நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அதற்கான ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்ற குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...