Main Menu

வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்

தேர்தல் காலப்பகுதிகளில், நடமாட முடியாத வயோதிபர்கள் மற்றும் நோயாளர்களை கதிரைகளில் வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு தூக்கிச் செல்வதை போன்று, தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் நடத்தையை அவதானிக்கையில், அதன் சாதகமான பெறுபேற்றை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சுகாதார பிரிவினரால் மாத்திரம் கட்டுப்படுத்தக்கூடியதொன்றல்ல எனவும் அதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் பரவிவரும் டெல்டா கொரோனா திரிபு மிகவும் ஆபத்தானதொன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை நாட்டுக்குள் பரவவிடாமல் தடுப்பதற்கு விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்புகொள்ளாதிருப்பதன் மூலம் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...