வவுனியாவில் இருவர் கைது!
வவுனியா பொலிஸாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
எனினும் பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிச்சென்றனர்.
இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தலைமையிலான 10இற்கும் மேற்பட்ட பொலிஸ் குழு குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்காவீதியில் வைத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை, வாகனத்தை வேகமாகச் செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.