Main Menu

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில்,  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன் இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது வாழ்த்துரையை நிகழ்த்தினார். விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஆளுநர் செயலகப் பணியாளர்களால் இனிமையான ‘ஆடிப்பிறப்புப் பாடல்’ பாடப்பட்டு சபையோரை மகிழ்வித்தது.

அதனைத் தொடர்ந்து கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் மெய்ஞானத்தின் ஊடாக நமது முன்னோர்களால் சொல்லப்பட்ட விடயங்கள் எவ்வாறு இன்றைய விஞ்ஞானத்துடன் ஒத்துப்போகின்றன என்பதை தர்க்கரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் தெளிவுபடுத்தினார். அத்துடன் ஆடிப்பிறப்பு பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கான தத்துவார்த்தமான பின்னணியையும்,  இப்பண்டிகை எவ்வாறு மனித வாழ்வையும் இயற்கையையும் ஒன்றிணைக்கும் ஒரு உன்னத நிகழ்வாக அமைந்திருக்கின்றது என்பது குறித்தும் அவர் மிகவும் ஆழமாக எடுத்துரைத்தார்.

பாரம்பரிய விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆடிப்பிறப்பு விழாவானது ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் கே.கமலபாகு அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.