Main Menu

யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் – கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த, உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து அங்கு கூடியோர், மல்லாகத்தை சேர்ந்த வான் சாரதியை பிடித்து நையப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர். அதனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன், வாகன சாரதியை கைது செய்து, வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...