Main Menu

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல் ஊர்தி! 

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தனின் புகழுடல் ஊர்தி சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சென்றடைந்தது.

வவுனியாவில் இன்று (03) காலை 8 மணியளவில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் வைக்கப்பட்ட ஊர்தியானது ஏ9 வீதியூடாக சென்று, முல்லைத்தீவு, கிளிநொச்சி என பயணித்தது.

இதன்போது பொது மக்கள் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் – நெல்லியடி ஊடாக சாந்தனின் பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று மாலை சாந்தனின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்படும் அவரது பூதவுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவில்லுக்கு மக்கள் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பகிரவும்...