மைத்திரி – கோத்தா சந்திப்பு இன்னும் சில தினங்களில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்னும் சில தினங்களில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுந்திரக்ககட்சிக்கும் இடையிலான கூட்டணி குறித்தும் ஜனாதிபதிவேட்பாளர் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தை செய்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்படுவதற்கான இணக்கமும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதையடுத்து அவருடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்காகவே ஜனாதிபதி அவரை சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.