Main Menu

முஸ்லிம் சமூகத்தினர் ஒரு சிறிய குழு மாத்திரமே பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு பட்டுள்ளனர்

இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அரசாங்கம் உயர்ந்தபட்ச அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இதனால் எந்தவித அழுத்தமும் இன்றி சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக வும் அமைச்சர் கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களினால் முஸ்லிம்கள் பாரியளவில் துன்பமடைந்துள்ளார்கள். சிறிய ஒரு குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருப்பதாகவும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் என்பனவற்றுக்கு இடமளிக்காதிருப்பது பிரதான அரசியல் கட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட முன்னால் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஒவ்வொருவருடமும் இவ்வாறான இன முறுகல் நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று தெரிவித்தார். 

ஊடகங்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை அவல நிலைக்கு உட்படுத்தக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பாரிய பொறுப்புக்கள் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி மொஹம்மட் அலி சப்ரி தெரிவித்தார். நாடு அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள வேளையில் இலங்கை சமூகத்தினர் இணைந்து பணியாற்றுவது அவசியமாகும். 

மத்ரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது அவசியமாகும். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் போஷிக்கும் மறைவான நிகழ்ச்சி நிரல்களில் சிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தக்கூடாது. 

இலங்கையர்கள் என்ற ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள சவாலுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார். 

பகிரவும்...