மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டால் கடும் விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் – மெல்கம் ரஞ்சித்
பொது மக்களின் கருத்தினை பெறாது அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்ககக்கூடும் என பேராயர் கார்தினர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மிலேனியம் செலன்ச கோர்பரேஷன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மகா சங்கத்தின் பிரதிநிதிகள், அஸ்கிரி மகாநாயக்கர்கள் மற்றும் அனு நாயக்கர்கள் உள்ளிட்டவர்களுடன் கடந்த 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்காலத்தில் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தமும் பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்றதன் பின்னரே கையெழுத்திட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள குறித்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றம் கூட அனுமதி வழங்கவில்லை.
எனவே இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் பாராளுமன்றத்திற்கோ, நாட்டு மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவை பாராளுமன்ற விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.