Main Menu

மியன்மாரில் இன்றும் பல நகரங்களில் போராட்டம்- பாதுகாப்புத் தரப்பு துப்பாக்கிச் சூடு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாங்கோன் மற்றும் மாண்டலே ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் இறப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதுடன், சில இடங்களில் நேரடி வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாண்டலேயில் பொலிஸாரின் இறப்பர் தோட்டா துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதுடன், மற்றொரு பகுதியில்  பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக்த தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவான பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.

ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக முயற்சிகள் முறியடிக்கப்பட்ட தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.

இதேவேளை, மியன்மாரில் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை முடக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருவதுடன் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...