மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயம் – சிவமோகன்
மாற்றுத் தலைமை என்பது பயனற்ற விடயமென தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாற்றுத்தலைமை என்ற கோசத்தை முன்வைத்து தனிக் கட்சியை தொடங்கியவர்கள் உருக்குலைந்துள்ளனரென குறிப்பிட்டார்.
அவரது அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மாற்றுத்தலைமை என்ற கோசத்தை வைத்தவர்கள் ஆளுக்கொரு கட்சியை தொடங்கி இன்று உருக்குலைந்து நிற்கின்றார்கள்.
இது ஒரு பயனற்ற விடயமாகும். ஏதோவொரு வெளிசக்தி இவர்களை இயக்குவதாகவே சந்தேகிக்கின்றோம். வேறு பண மூலங்கள் மூலம் இவர்கள் இயக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகமும் உண்டு.
வட, கிழக்கில் வாழாதவர்கள் மாற்றுத்தலைமை என்று கூறிக்கொண்டு வருவதை எமது தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தலைமைகள் எமது வட, கிழக்கு மாகாணத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத எந்த ஒரு தலைமைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது” என மேலும் தெரிவித்தார்.