Main Menu

மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய  தினம் குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கயூ கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த விஜயத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலையிட்டு குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னால் போராளிகளுக்கு வழங்குவதற்ககென பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டது.

இந் நிலையில் எந்த விதத்திலும் கயூ கூட்டுத்தாபனத்திற்கு குறித்த காணிகளை வழங்க முடியாது எனவும் கட்டாயத்தேவை இருப்பின் வனவள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்திலும் கயூமரங்கள் காணப்படுவதால் அரச அனுமதி பெற்று அக்காணிகளை கயூ கூட்டு தாபனத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்த நிலையில் முரண்பாடு ஒன்று தோற்றம் பெற்ற நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக பிரதேச செயளாலரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது.

அதே நேரத்தில் கயூ கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கயூ கூட்டு தாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்று தர முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கபட்ட நிலையில் குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது.

பகிரவும்...