Main Menu

மக்களின் நன்மைக்காக எந்தவித சவால்களையும் வெற்றி கொள்ளத் தயார் – ஜனாதிபதி

நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மேலும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், இந்த நோக்கத்துடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் எந்தவித சவால்களையும் வெற்றிகொள்ளத் தான் தயாராக தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானத்தைப் பெறும் இலக்கினை அடைவதற்கான துரித பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பிரதான துறையாக சுற்றாலா துறையை மேம்படுத்த வேண்டும்.

இந்த துறையில் அனுபவமும் அர்ப்பணிப்புமிக்க திறமையான குழுவொன்று எமக்கு அவசியமாகும். அனைத்து படிமுறைகளிலும் துரித பெறுபேறுகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

மேற்கொள்ளும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

குறித்த நோக்கத்துடனான வேலைத்திட்டங்கள் காணப்படுமாயின் எந்தவித சவால்களையும் வெற்றிகொள்ள நான் தயாராக உள்ளேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பகிரவும்...