Main Menu

மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களின் பின்னர் அம்மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை)  பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை அந்த மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் பெரும்பான்மை ஆதரவின்றி ஃபட்னாவிஸ் ஆட்சி அமைத்திருப்பதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிஷரூபிக்க தேவேந்திர ஃபட்னாவிசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேவேந்திர ஃபட்னாவிஸ், முதலமைச்சர் பதவியையும் அஜித் பவார் தனது துணை முதலமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை பாஜக எதிரொலிக்கும் என குறிப்பிட்டார்.

சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் ஆளுநர் கோஷியாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் தேவேந்திர ஃபட்னாவிஸ் வழங்கினார்.

இதனிடையே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...