Main Menu

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என மத்திய அரசின் மேலதிக செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவையில் கடந்த இரண்டு வாரங்களாக இருந்துவந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளதுடன், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இதனால், சட்டசபையில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்தது. இதில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் (07), அ.தி.மு.க. (04) பா.ஜ.க. (03) என எதிர்க் கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து, சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டசபைச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் நாராயணசாமி, தனது பதவியை இராஜினாமா செய்து கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதையடுத்து, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதனை ஏற்றுக்கொண்டதுடன், புதுவை அரசியல் நிலைவரம் குறித்த விபரங்கள் மத்திய அரசுக்கு அறிக்கையிடப்பட்ட நிலையில், தற்போது புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...