Main Menu

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த இளைஞனை கைதுசெய்ய முயன்ற போது, அவர் தப்பியோடியதால், அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது, குறித்த இளைஞனிடமிருந்து சிறிய கைத்துப்பாக்கியும், ஒரு கூரான கத்தியும் பொலிஸார் கைப்பற்றினர்.

தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் மாஸ்கோவில் பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எங்களுடைய குடிமகன் ஒருவரை இழந்துவிட்டோம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கருத்து சுதந்திதத்தையும், நம்பகத்தன்மையையும் கற்றுக்கொடுத்ததற்காக! ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கும்’ என கூறினார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

பகிரவும்...