Main Menu

பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது!

பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது 13 பேர் முறையாக குடிவரவு ஆவணங்கள் இன்றி அதில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டு குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட அகதிகள் சிரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைய முற்பட்டமை தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

பகிரவும்...