Main Menu

பாதுகாப்பு செயலாளரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் ‘போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். இது தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 1027 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...