Main Menu

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு!

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுமுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், விஸ்சுவமடு பாரதி வித்தியாலயம், இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கூழாமுறிப்பு பாடசாலை, தண்டுவான் அ.த.க. பாடசாலை உள்ளிட்டவை காணப்படுகின்றது.

அத்துடன் இன்று (செவ்வாயிக்கிழமை) முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையில் தளபாடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களின் ஆவணங்கள் அடங்கிய அலுமாரி இராணுவத்தால் எடுத்துச்செல்லப்பட்டு அயலில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலைக்கு முன்பாகக் கூடிய 60இற்கும் மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, இப்பாடசாலைக்கு அண்மையில் உள்ள பாடசாலையான வலதுகரை மகாவித்தியாலயத்தில் கூடிய 30 இற்கும் மேற்பட்ட பெற்றோரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்ட விவசாய பிரதேசமாக முத்தையன்கட்டு காணப்படுவதாலும், தனிமைப்படுத்தல் நிலையம் குறித்த பகுதி காணப்படுவதனால் இந்த நடவடிக்கை ஆபத்தினை விளைவிக்கும் என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...