Main Menu

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்தது மொட்டு கட்சி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை சுருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மேலும் பொலிஸாருக்கு தடுப்பு காவல் உத்தரவுகளை வழங்குவதற்கான அதிகாரங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை பாதகமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். அதன் மூலம் ஒரு சாதாரண எதிர்ப்புச் செயலைக் கூட பயங்கரவாதச் செயல் என வரையறுப்பது மக்களுக்கும் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயங்கரவாதம் என்பது ஒரு பரந்த நோக்கத்துடன் கூடிய ஒன்று என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இந்த சட்டமூலத்தில் உள்ளதைப் போல ஒரு விரிவான வரையறை அவசியம் இல்லை. எனவே, முடிந்தவரை அதைக் குறைக்க வேண்டும்.

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் நல்லவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் வேறு சில நோக்கங்களுக்காகப் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இருக்கலாம். எனவே, அத்தகைய ஏற்பாடு தேவையில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

30 வருடங்களாக பயங்கரமான போரை எதிர்கொண்ட நாட்டுக்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட புதிய சட்ட ஏற்பாடுகள் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இருப்பினும் நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்த சட்டமூலம் திருத்தப்பட்டால், அதை ஆதரிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...