Main Menu

பதவி மோகத்திற்காகவே துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார்- யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டு

பதவி மோகத்திற்காகவே யாழ்.பல்கலைத் துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.  குறித்த ஊடக சந்திப்பில் யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனித்ததன் பிற்பாடு தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்பட்ட நிலையில், எங்கள் தமிழ் உயர் அதிகாரிகளும் பதவிமோகம் மற்றும் பதவியை தக்கவைக்கவேண்டும் என்பதற்காக தமிழர்கள் இதுவரைப்பட்ட துன்பியல்கள் உணர்வுகள் எல்லாம் மறந்து அரசாங்கத்துக்கு வால்பிடிப்பவர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு அபிவிருத்தி வந்தால் போதும் அதற்கு அரசாங்கத்தின் கட்சியின் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளே சண்டைபோட ஆரம்பித்துள்ளனர். அதற்கு எதிர்கட்சி ஒருவரும் குரல்கொடுத்து வருகின்றார்.

அதேபோன்று யாழ்பாணத்திலும் இவ்வாறே அரசாங்க கட்சியில் இருப்பவார்கள் தாங்கள் தான் அபிவிருத்தியை கொண்டு வந்தோம் என விளம்பரங்கள் செய்கின்றனர்.

ஆனால் இந்த யாழ்.பல்கலைக்கழக்தின் நினைவு தூபி உடைப்பு விவகாரம் சார்பாக யாழ்.மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் டக்ளஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன், தாங்கள் அதனை உடைக்க உத்தரவிட்டோம் என கூறவில்லை ஏன்?

அபிவிருத்திக்கு குரல்கொடுக்கின்ற நீங்கள், ஏன் இதற்கு பொறுப்பேற்க தவறுகின்றீர்கள். அதனை பகிரங்கமாக தெரிவியுங்கள் உங்கள் ஆதரவாலேதான் இந்த அரசாங்கம் செய்திருக்கின்றது. அல்லாவிடின் நீங்கள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு அந்த உபவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் செய்யமாட்டார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் பின்னியிருப்பவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துன்பியல் தொடர்பாக ஒரு நினைவுச் சின்னமும் உருவாகக்கூடாது என இந்த அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வாறான நினைவுச் சின்னம் இருப்பதாயின் அதை அழிப்பதற்கு முற்படுகின்றது.

ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் ஜே.வி.பி.யினர் அந்த கிளர்ச்சியின் நினைவாக தங்களது போராளிகள் இறந்தமையை நினைவுகூர்ந்து சில பல்கலைக் கழகங்களில் நினைவு தூபியை அமைத்திருக்கின்றனர். அது உடைக்கப்பட வில்லை. ஆனால் எங்களது உறவுகள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்ததற்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நினைவு தூபியை அமைத்தால் அது உடைக்கப்பட வேண்டும்.

உண்மையிலே எமது தமிழ் மக்கள் பெரிய இனப்படு கொலைக்கு ஆளாகியிருக்கின்றனர். அதை எங்களுடைய அரசியல்வாதிகள் சிலரே எடுத்துச் செல்லுவதற்கு தவறுகின்றனர். இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்துவதில் அவ்வாறான நினைவு தூபிகளும் எதிர்காலத்தில் உதவக்கூடியவை, பல்கலைக்கழக மாணவர்கள் அதைத்தான் நினைவு கூர்ந்தார்கள் அதைக்கூட உடைத்துவிட்டார்கள்.

உபவேந்தர் ஒரு தமிழர் அவரே தான் அதைச் செய்ததாக சொல்லுகின்றார். ஆனால் நாங்கள் அவ்வாறு உத்தரவிடவில்லை என இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

தமிழரின் கையைப் பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள். எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின், தமிழ் உணர்வை தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதன் நினைவை யாழ்.உபவேந்தர் தன்பதவி மோகத்திற்காக உடைத்திருக்கின்றார் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...