Main Menu

பசுமைக் காவலர் விவேக்: அவர் நாட்டிய மரங்களால் என்றென்றும் வாழ்வார்- ஐங்கரநேசன் இரங்கல்!

மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான சின்ன்க கலைவாணர் விவேக், அவர் நாட்டிய மரங்களால் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

விவேக்கின் மறைவு குறித்து, இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “சமுதாயச்  சீர்திருத்தக்  கருத்துகளைப்  பரப்பிச் சின்னக்  கலைவாணர் என்று தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர் விவேக்.

வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை  நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர் என்று பெயர் பெற்றவர். அவர் புகழுடம்பு மறைந்தாலும் அவர் நாட்டிய மரங்களால் எம் நினைவில்  என்றென்றும் வாழ்வார்.

நடிகர் விவேக் நகைச்சுவையில் தனக்கெனத் தனியான பாணியை உருவாக்கியவர். இரசிகர்களைச் சிரித்துவிட்டு மட்டும் போகாமல் சிந்திக்கவும் தூண்டியவர். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளைக் களைவதற்குத் தன்நடிப்பாற்றலால் விழிப்புணர்வு ஊட்டியவர்.

நிழலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சீர்திருத்தக் கருத்துகளின் பரப்புரையாளராகச் சளைக்காது பணியாற்றியவர்.

பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவுரைப்படி சூடாகும் பூமியைக் குளிர்விக்கும் நோக்கில் ஒருகோடி மரங்களை நடுகை செய்யும் பணியை ஆரம்பித்தவர். ‘கிறீன் கலாம்’ என்ற அமைப்பை நிறுவி அதனூடாக முப்பத்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகைசெய்த நிலையில் மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது.

மரங்களை நடுகை செய்பவர்களின் நினைவுகளுக்கு மரணம் இல்லை. அவர்கள் நடுகை செய்த மரங்களாலும், அம்மரங்களிலிருந்து வீழ்ந்து பரவும் விதைகளின் துளிர்ப்பாலும் சந்ததிகள் கடந்தும் அவர்கள் நினைவிற்கொள்ளப்படுவார்கள். விவேக்கின் நாமமும் பசுமை உலகில் அழியாது நிலைத்திருக்கும்” என ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...