Main Menu

நோர்வே இளவரசியின் முன்னாள் கணவன் தற்கொலை!

நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸின் முன்னாள் கணவரான டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென், தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாக அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், அரி பென் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அரி பென்னின் மறைவுக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரி பென், பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்.

அவரை பற்றிய இதமான மற்றும் நல்ல நினைவுகளை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் மற்றும் அரி பென் ஆகியோர் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்று முறைப்படி பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...