Main Menu

நிர்மலாதேவி வழக்கு… ஆட்சி மாறினால் உண்மை வெளிவரும்… வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர் பேட்டி

நாட்டின் நலன் கருதி சில உண்மையை இந்த வழக்கில் சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் நேரடியாக விஐபிக்கள் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. ஆனால் அதை மறைத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டுமே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டு போலியானது என்பதை நிரூபிக்க நிர்மலாதேவியே அஞ்சுகிறார்.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் இன்று தப்பிக்கலாம். ஆட்சி மாறினால் உண்மைகள் வெளிவரும் என்று இந்த வழக்கிலிருந்து விலகியுள்ள வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்த நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியில் வழக்கில் முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். பின்னர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கை நடத்திவருகிறார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தான் விலகுவதாக பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நிர்மலா தேவி வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பை எழுதிவிட்டு வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. நிர்மலா தேவிக்கு அவருடைய குடும்பத்திலும் ஒத்துழைப்பு இல்லை. வழக்கிலிருந்து விடுபட அவரும் சுயமாக நினைக்கவில்லை. தன்னை அமைச்சர்கள் மிரட்டுவதாகக் கூறுகிறார். நூலில்லாத பம்பரம் போல நிர்மலாதேவி ஆடிக்கொண்டிருக்கிறார்.

நாட்டின் நலன் கருதி சில உண்மையை இந்த வழக்கில் சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் நேரடியாக விஐபிக்கள் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. ஆனால் அதை மறைத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டுமே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டு போலியானது என்பதை நிரூபிக்க அவரே அஞ்சுகிறார். தமிழகத்தில் இந்த வழக்கு நடக்கும் வரை நீதி கிடைக்காது. அதேபோல இந்த ஆட்சி நீடிக்கும்வரை வழக்கில் நியாயம் கிடைக்காது. எனவே நான் இந்த வழக்கிலிருந்து விலகுகிறேன். உண்மைக் குற்றவாளிகள் இன்று தப்பிக்கலாம். ஆட்சி மாறினால் உண்மைகள் வெளிவரும்” என்று பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...