Main Menu

நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழில்துறையினர் உள்ளிட்டோரின் பணமதிப்பு குறைந்து வரும்போது, பிரதமர் மோடியின் நான்கு, ஐந்து நண்பர்களின் பணமதிப்பு ஏறி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மோடி அரசு, பொருளாதாரத்தை மிக மோசமாக கையாளுகிறது. அதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய தார்மிக கடமை, காங்கிரசுக்கு இருக்கிறது.

70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துகள், மோடிஜியின் சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

தனியார்மயமாக்கத்துக்கு காங்கிரஸ் எதிரி அல்ல. ஆனால், காங்கிரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு ‘லாஜிக்’ இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை காங்கிரஸ் அரசு தனியார்மயம் ஆக்கியது இல்லை. எனவே, பணமாக்கல் திட்டத்தை எல்லா மட்டத்திலும் எதிர்ப்போம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து மத்திய அரசு புதிய அர்த்தம் கொண்டு வந்துள்ளது.

அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தது என்றால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலையும் உயரும். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் விலை குறைந்து வருகிறது. ஆனால் இங்கு அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் கடந்த 7 ஆண்டுகளில் சம்பாதித்த ரூ.23 லட்சம் கோடி எங்கே போனது?

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழில்துறையினர் உள்ளிட்டோரின் பணமதிப்பு குறைந்து வரும்போது, பிரதமர் மோடியின் நான்கு, ஐந்து நண்பர்களின் பணமதிப்பு ஏறி வருகிறது. இந்த சக்திகளை நாம் எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...