Main Menu

தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆணையில் தாம் ஒப்பமிட்டு விட்டதாக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.

எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலர் ஆர்எம்டிபி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, தூக்கில் போடுபவர் பணிக்கு இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...