Main Menu

துனிசியா அதிபராக பதவி ஏற்றார் கைஸ் சையத்

பல நாட்டின் ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக அமைந்த அரபு வசந்தத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்த துனிசியா நாட்டின் புதிய அதிபராக கைஸ் சையத் இன்று பதவி ஏற்றார்.

துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.

கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் துனிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிபரின் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முதன்முறையாக 24-11-2015 அன்று  ‘எமர்ஜென்சி’ எனப்படும் அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, உள்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் வேளைகளில் எல்லாம் அடுத்தடுத்து அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில், துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்ததையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபர் நடந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளை பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பழமைவாதியான கைஸ் சையத் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பிரபல வழக்கறிஞராவார். இவரது ஆட்சிக்காலத்தில் இனி பயங்கரவாதிகளை ஒடுக்குவது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீரமைப்பது, சமூக நீதியை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளை கைஸ் சையத் நிறைவேற்ற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...