Main Menu

தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் நாகரீகமற்ற செயற்பாடு

யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது.

இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணைக்குழுவிடம் விபரமாக எடுத்துரைத்து வருவதோடு, தொடர்ந்தும் தாம் அங்கு கடமைபுரிய மறுத்து வருகின்றனர். அதற்கான காரணங்களை ஆவணங்களுடன் சமர்ப்பித்துள்ளனர்.

அந்தவகையில் பெண் உத்தியோகத்தர்கள் இருவரை தமது அலுவலகத்திற்கு அழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் “நீங்கள் இருவரும் எனக்கு முன்னால் கட்டிப்பிடியுங்கள்” என வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த உத்தியோகத்தர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவரவுள்ளதோடு, நடைபெறும் விசாரணை அதற்கான தீர்வாக அமையாவிட்டால் பாரதுரமான விளைவுகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே சந்திக்க நேரிடும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. நடைபெறும் விசாரணைகள் மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையாகவும் நடைபெறும் என்பதில் சங்கம் அதீத நம்பிக்கைகொண்டுள்ளது  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...