Main Menu

திருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை செய்ததால் கணவரை உதறிய மனைவி

கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

இவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது தனது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

ஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

மேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.

இந்த நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.

எனவே ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து அதை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ரக்‌ஷாவை வயிற்று பிரச்சனைக்கு சிகிச்சை பெறலாம் என கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

ஆனால் டாக்டர்களிடம் ரகசியமாக பேசிய அவர் ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

எனவே அதற்கான சோதனையை டாக்டர்கள் மேற்கொண்டனர். சோதனை செய்வது தொடர்பான படிவத்தில் ரக்‌ஷாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அவர் படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு விட்டார்.

டாக்டர்கள் சோதனை செய்தபோதுதான் கற்பு பரிசோதனை நடந்தது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த ரக்‌ஷா உடனே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசினார்கள்.

அப்போது என் மீது சந்தேகப்பட்ட கணவரோடு வாழ முடியாது என்று ரக்‌ஷா பிடிவாதமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா சரத் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.

பகிரவும்...