Main Menu

திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி

இந்தியா சென்னையில் திருமணம் முடிந்து தேனிலவுக்காக சென்ற இளம் ஜோடியில் கணவனை இழந்த புதுமணப்பெண்ணின் கண்ணீர் காண்போரை பதறவைக்கிறது.

தனியார் நிறுவனமொன்றி பணிபுரிபவரே அரவிந்த். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகளே, இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மணாலியின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்த்த தம்பதிகள், மணாலிக்கு அருகேயுள்ள தோபிக்குச் சென்றுள்ளனர். அங்கு, பிரபலமான ‘பரா க்ளைடிங்’ விளையாட்டில் ஈடுபட அரவிந்த் டிக்கெட் வாங்கியுள்ளார். பரசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இணைந்து பறப்பதுதான் இந்த ‘பரா க்ளைடிங்’ விளையாட்டு. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவரின் விருப்பத்துக்காக சம்மதித்து ப்ரீத்தியும் உற்சாகத்துடன் கணவர் பறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

விமானி ஹரி ராமுடன் பறந்துகொண்டிருந்த அரவிந்த், திடீரென பரசூட்டில் தடுமாற, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுதாரிப்பதற்குள், பரசூட்டில் இருந்து கீழே விழுந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். ப்ரீத்தி கண் முன்னாலேயே நடந்த இந்த கோரச் சம்பவம், அவரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அரவிந்த்தின் உடலைப் பெறுவதற்காக, அவரது உறவினர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்குப் பறந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குலு மாவட்ட எஸ்.பி., பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால்தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “பரசூட் விமானி ஹரி ராமும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். 336, 304 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தக் கூறியுள்ளோம்” என்றுள்ளார்.

அரவிந்த் குடும்பத்தாரிடம் பேசினோம். “பரா க்ளைடிங் விளையாட்டுக்கு அரவிந்த் கிளம்பியபோதே வேண்டாமென ப்ரீத்தி தடுத்துள்ளார். த்ரில் விளையாட்டுகளில் ஆர்வம்கொண்ட அரவிந்த் விடாப்பிடியாக இருந்ததால், வேறு வழியில்லாமல் ப்ரீத்தியும் வழியனுப்பியுள்ளார். ‘அப்பவே வேண்டாம்னு சொன்னேனே… கேட்டீங்களா?’ எனக் கணவரின் உடலைப் பார்த்து ப்ரீத்தி அழுதது தாங்க முடியாத சோகம். திருமணமான பத்தாவது நாளே இருவரின் வாழ்க்கையும் சூனியமாகிவிட்டது” என்று கண்ணீர் சிந்தினர்.

வாழ்வில் சில சமயங்கள் சிந்தித்து செயற்படுவது அவசியமாகிறது. 

பகிரவும்...