Main Menu

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர்.

மத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு அதை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்தி கற்பது கட்டாயமில்லை என்றும் கூறியது.

இந்தநிலையில் திருச்சியில் இந்தி மொழிக்கு எதிராக சிலர் போராட்டங்களை ரகசியமாக தொடங்கி விட்டனர். அதன்படி திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். மஞ்சள் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்துள்ள மர்மநபர்கள் ஆங்கில எழுத்துக்களை மட்டும் விட்டு விட்டனர்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்தி எழுத்துக்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் மற்றும் திருச்சி ஏர்போர்ட் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்தி எழுத்துக்களை அழித்த மர்மநபர்கள் யார்? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...