Main Menu

திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது- தங்கம் தென்னரசு பேச்சு

நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது- மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன். தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக்கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுனுடைய அடிப்படையில் அடுத்த பரிணாமமாக அதை கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம். சுய மரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடலுடைய ஆட்சி. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, சம வேலை வாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது, சீர்தூக்கும், யாரையும் பிரிக்காது எல்லோரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...