Main Menu

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை போடாதீர்கள்- கட்சிகள் மாநாட்டில் கோரிக்கை!

தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும் என தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு நினைவுகூருவதை தடை விதிப்பதானது தமிழர்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும் என்பதைால் அரசாங்கம் இந்தத் தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை கண்டிப்பதற்காக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஜனநாயாகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், “தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களை அஞ்சலிப்பதும் நினைவுகூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும் கடமையுமாகும்.

அதற்கு எதிராக தடைபோடுவது தமிழர்களின் உரிமையை மறுதலிப்பதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் நிராகரிக்கிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்கவேண்டும்.

திலீபனுக்கு மட்டுமல்லாமல், போராளிகளையும் பொதுமக்களையும் நினைவுகூருவது எங்கள் கடமையும் உரிமையுமாகும். அதனை பயங்கரவாதம் எனக்கூறி தடைசெய்வது ஏற்புடையதல்ல.

இன்றைய கூட்டத்தில் சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நினைவுகூரல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்ககூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு நாளை கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் இதனை செய்யுமா, செய்யாதா என்பதற்கு அப்பால் எமக்குப் பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். பதில் வழங்காவிட்டால் அல்லது இவ்விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால் தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது.

அதனை நாங்கள் துாதுவராலயங்களுக்கும் மனித உாிமை செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லுவோம்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளாமை தொடர்பாகக் கேட்டபோது அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் இக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

பகிரவும்...