Main Menu

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: தீர்ப்பு சாதகமாகவே அமையும்- பிள்ளையான் நம்பிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு, தாங்கள் கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பித்ததின் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின்பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்  குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என்ற அறிவிப்பினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு, நாளை மறுதினம் (புதன்கிழமை) தாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார்.

பகிரவும்...