Main Menu

சுகாதார நடை முறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்திவரும் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை தொடர்ந்தும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

இந்த நிலையை தக்கவைத்துக்கொள்வதுடன் இந்த வைரசை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

இதுகுறித்து திடமான நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

திவுலப்பிட்டிய மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமான வைரஸ் கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 394 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

24,778 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் இந்த தொற்று தொடர்பில் அரசாங்கம் கண்காணித்து வருகின்றது. இதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொது மக்கள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...