Main Menu

சாதாரண அரசியல் வாதிகளுக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா

நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக  கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

அத்துடன் இன்று  ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு  சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை  பெய்து இருந்தது.

இதன்காரணமாக ஜனாதிபதி விமானத்தின் ஊடாக  நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம்.இவ்வாறு மக்கள் மனநிலை இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயமாகும்.

ஆகவே கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவது காத்திருப்பதுதான் தற்போது செய்ய வேண்டிய விடயம்.

இதேவேளை 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும்.

அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என நாட்டில் ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு  ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிரவும்...