Main Menu

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மேலும் வலுவடைந்தது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (சனிக்கிழமை) இணைந்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 7 வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் என இங்கு பிரதானமாகக் கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வெளியிப்படுத்தியுள்ளனர்.

பகிரவும்...