Main Menu

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்

இலங்கை கடற்படையினர் மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த ஏப்ரல் 01 முதல் 15 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு நீர்ப்பரப்புகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த 15 நாள் தேடுதல் வேட்டையின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 11 சிறுபடகுகள் மற்றும் 2 இழுவைப் படகுகள்,
கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள்,
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் என்பன பரிமுத்துல செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் விரிவாக நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை (செம்மலை, எலிசபெத் தீவு, உப்புரால், புடுவக்கட்டு),
முல்லைத்தீவு (நந்திக்கடல் களப்பு, அலம்பில்), யாழ்ப்பாணம் (கோமர் முனை), புத்தளம் (உச்சமுனை) உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு, கின்னியா, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்முடா விசேட அதிரடிப்படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.