Main Menu

சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன்

சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து.

அவ்விரு பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன், ‘ஏற்கனவே இத்தகைய செய்தியை தனியார் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த நிலையில் நான் அதனை மறுத்திருந்தேன்.

அதன் பின்னரும் இவ்விரு ஊடகங்களும் இந்தப் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான வர்ணகுலசூரிய மற்றும் அத்துகோரள ஆகியோரும் குறித்த இரு பத்திரிகைகளின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் வெளியிட்டனர்.

ஏற்கனவே ஊடகமொன்றினால் தான் கூறியதாக வெளியிடப்பட்ட செய்திக்கு சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அச்செய்தியை வெளியிடுவதென்பது ஊடக தர்மத்திற்குப் புறம்பானது மாத்திரமன்றி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களையும் மீறுவதாகவே அமைந்துள்ளது.

மக்களின் அனுதாப வாக்குகளைத் திரட்டிக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவினால் ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, மறுபுறம் எதிரணி வேட்பாளருக்கு சேறுபூசும் நோக்கில் அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு இச் செய்தி சிறந்த உதாரணமாகும்.

இவற்றுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாஸ அவருடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பகிரவும்...