Main Menu

சசிகலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் – உளவுத்துறை

சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் என உளவுத்துறை சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

சசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கர்நாடக உளவுத்துறை சிறை நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ சசிகலா விடுதலை செய்யும்போது அவரை அழைத்து செல்ல ஏராளமான தொண்டர்கள் வரலாம். அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சிறை பகுதிக்கு வராத வகையில் எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்.

அவரது பாதுகாப்பை கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிட வேண்டும். மற்ற கைதிகள் போன்று இரவு 7:00 மணிக்கு பதில் இரவு 9:30 மணிக்கு விடுதலை செய்யலாம். மேலும் அவரை கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விட்டு வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கிடையே அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தையும் கடந்த மாதம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...