Main Menu

கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியப்படுமா என்பது குறித்து தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாவது அலை ஏற்படும் என்று தாம் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ள தேசப்பிரிய, எனினும் அந்த அபாயத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதால்,  தேர்தலை நடத்துவது சவாலாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான அபாயம் உணரப்பட்டால் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை கடுமையாகப் பின்பற்றினால் அதிலிருந்து மீள முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அபாய மட்டத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மேலும் உதாசீனப்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றை வர்த்தமானிப்படுத்தாமல் போலியாக முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் கைகளைக் கழுவுமாறும் சமூக இடைவெளியைப் பேணுமாறும் கூறிக் கொண்டிருப்பது பயனற்றது என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், எனவே அவற்றை துரிதமாக வர்த்தமானிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழமையான தேர்தல்களைப் போன்றல்லாமல் இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் புதியதொரு வழமையான சூழலிலிலேயே நடைபெறவுள்ளது என்றும் எனவே, அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...