Main Menu

கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது – சுரேஷ் பிரேமசந்திரன்

கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை  மக்கள் கொடுக்கவேண்டும் என கூறியிருக்கின்ரார்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக பேரம் பேச தவறியது எதற்காக? என்ற கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் விளக்கமளிக்கவில்லை இப்போது பேரம் பேசும் சக்தியை கொடுங்கள். என கேட்கிறார்கள்.

போருக்கு பின்னர் 10 வருடங்களில் தமிழ் மக்கள் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். எதிர்க் கட்சி அந்தஸ்த்தும் கூட தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கின்றது.

அப்போதும் பயன்படுத்தவில்லை. மேலும் வரவுசெலவு திட்டத்தின்போதும், ஆட்சி கவிழ்ப்பின் போதும் கூட பேரம் பேசுவதற்கான மிக சிறந்த சந்தா்ப்பம் கிடைத்திருந்தது.

ஆனாலும் அதனை பயன்படுத்தவில்லை. ஆகவே பேரம் பேசுவதற்கு கிடைத்துள்ள சந்தா்ப்பத்தை பயன்படுத்த தவறியது எதற்காக? என்பதை கூட்டமைப்பு கூறவேண்டும்.

மேலும் கிடைத்த சந்தா்ப்பங்களை தவறவிட்டு இப்போது பேரம்பேச சந்தா்ப்பம் கேட்பது கதிரையை நிரப்பும் வேலை மட் டுமேயாகும். அதனால் பேரம் பேசல் நடக்காது என்பதே உண்மை” என்றார்.

பகிரவும்...