Main Menu

கும்பகோணத்தில் மாயமான தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பிள்ளைகள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தனர். மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். இருந்தபோதும் அவர் எங்கே உள்ளார்? என்ற விபரமே தெரியவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமானார். அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் அதன் பிறகு ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். பின்னர் மாரியம்மாளின் மகன்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்றனர். அவர்களை அடையாளம் கண்ட மாரியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார். டி.எஸ்.பி. மது பாபு, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் செபாஸ்டின் ஆகியோர் முறைப்படி அவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மாரியம்மாள் தெரிவிக்கையில், இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

பகிரவும்...