ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடமே முறையிட வேண்டும் – உதய கம்மன்பில
ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர, இந்தியாவிடம் முறையிடக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன.
இந்தநிலையில் இதுகுறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தமிழ் சகோதரர்கள் ஜனாதிபதியிடமே முறையிட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.